திரி என்றால் மூன்று. கடுகம் என்றால் மருந்து. மூன்று மூலங்களினால் ஆன மருந்துதான் திரிகடுகம். பழந்தமிழர் வாழ்வில் இரண்டறக் கலந்திருந்த இந்த மருந்தைப் பற்றி, இன்றைய தலைமுறையினருக்கு எத்தனை தெரியும் என்பது கேள்விக்குரியது. திரிகடுகம், திரிகடுகு என்றழைக்கப் படும் இந்த மருந்துதான் பழந்தமிழரின் நோயற்ற பெருவாழ்வுக்கு அடிப்படையாகவும், ஆதாரமாகவும் இருந்ததென்றால் மிகையில்லை.
"சுக்கு","மிளகு","திப்பிலி" என்கிற இந்த மூன்றும் கூடியதுதான் திரிகடுகம். ஆம், எளிதாய் கிடைக்கிற இந்த மூன்று தாவரப் பொருட்களே நோயற்ற வாழ்வின் ரகசிய மருந்து. திரிகடுகம் போலவே திரிபலா என்கிற ஒன்றும் தமிழர்கள் வாழ்வில் முக்கிய இடம் பெற்றிருந்தது. நெல்லிக்காய், தான்றிக்காய், கடுக்காய் மூன்றும் சேர்ந்ததுதான் திரிபலா. திரிகடுகத்தை மும்மருந்து என்றும், திரிபலாவை முப்பலை என்றும் அழப்பர்.
திரிகடுகத்தின் மகத்துவம் பற்றி சொல்ல வரும்போது தமிழ் இலக்கியத்தில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான "திரிகடுகம்" பற்றி கூறியே ஆகவேண்டும். நல்லாதனார் என்பவர் இயற்றிய இந்த நூலின் பெருமையை பழந்தமிழ் பாடல் ஒன்று பின்வருமாறு சொல்கிறது.
அலகு இல் அக நோய் அகற்றும் - நிலை கொள்
திரிகடுகம் என்னும் திகழ் தமிழ்ச் சங்கம்
மருவு நல்லாதன் மருந்து.
உடலில் இருக்கும் நோய்களை அகற்றும் சக்தி திரிகடுகம் என்ற மருந்துக்கு இருக்கிறது அதைப்போல நல்லாதன் என்றவர் எழுதிய திரிகடுகம் என்னும் நூலுக்கு மனதின் சஞ்சலங்களான அக நோயை நீக்கும் தன்மை உள்ளது என்கின்றனர். இந்நூலில் உள்ள ஒவ்வொரு பாடலிலும் மூன்று மூன்று அறங்கள் சொல்லப்படுகின்றன. இதை பின்பற்றி நடப்போர் உள்ளத்திலே ஒரு நோயும் இன்றி பெருவாழ்வு வாழமுடியும்.
எட்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாக கருதப்படும் "பிங்கலந்தை" என்கிற பிங்கலநிகண்டுவிலும் திரிகடுகம் பற்றிய குறிப்புகள் காணக் கிடைக்கிறது. இது தவிர சித்தர் பெருமக்கள் பாடல்களிலும் திரிகடுகம் பற்றிய தகவல்கள் காணக் கிடைக்கின்றன.
பதினென்கீழ்கணக்கு நூல்களில் ஒன்றுதான் திருக்குறள் என்பதும் கூடுதல் தகவல். திருக்குறளின் தரத்துக்கு இனையாக வைத்துப் போற்றப் பட்ட நூல் திரிகடுகம். உடலையும், மனதையும் சீர்படுத்தி மேம்படுத்தும் இந்த திரிகடுகங்களில், உடலை வளர்க்க உதவும் திரிகடுகம் பற்றியே இனிவரும் நாட்களில் விரிவாக பார்க்க இருக்கிறோம்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க..
Post a Comment



6 comments:
பயனுள்ள பதிவு தொடருங்கள் ஐயா
Your knowledge bank makes me say hats off to you.
திரிகடுகம் என்று ஒரு புத்தகம் ஒழுக்கம் பற்றி இருக்கும். அதைப்பற்றியும் எழுதுங்கள்
பயனுள்ள தகவல் .நன்றி
கடுகம் என்றால் காரப்பொருள் என்றல்லவா அர்த்தம்...?
நல்ல தகவல்கள் நன்றி
Post a Comment