அட்டைவிடல் தொடருக்காக திரட்டிய தகவல்கள் சிலவற்றை பதிவின் நீளம் மற்றும் தொடர்ச்சி கருதி தவிர்க்க வேண்டியதாயிற்று. அந்த தகவல்களை இன்றைய பதிவில் தொகுத்திருக்கிறேன்.
தகுதியில்லாத அல்லது தவறான அட்டைகளை கடிக்க விடுவதால் உண்டாகும் விளைவுகளை அகத்தியர் பின் வருமாறு விளக்குகிறார்.
விட்டவுருத் தானும் விழவுருவே யானக்கால்
வெட்டுருவாய் வீங்குமது வேதனையாந் – திட்டஞ்
சுரமாங் கலக்கமாஞ் சூழ்தினவுங் காணும்
உரமாகும் புண்ணு முதிர்ந்து.
தவறான அட்டைகளை சிகிச்சைக்கு பயன்படுத்தினால் நோயாளிக்குக் காய்ச்சல் மயக்கம் வேதனை உண்டாகும். மேலும் அட்டைவிட்ட இடத்தில் எரிச்சல் நமைச்சலுண்டாகிக் கடிவாயும் வீங்கும்.
விட்டவுருத் தன்னில் விஷஉதிரந் தான் சிக்கிப்
பட்ட வுருவைப் பலகாலும் – விட்டுவிடு
மத்தா லுருவடைய மான விஷமாகும்
முத்தார் தனத் தாய் மொழி.
நிரம்பக் குடித்துருவும் நித்திரை போய் மீள
வரம்பில் கடிகடிக்கி லதனைத் – திரும்பப்
புளியிட்டு வாங்கும் பிடித்திருந்தால் மீளக்
கருவுற்றுத் தான் கடிக்கும் காண்.
அட்டைதனை விட்டு அதன்மீதி லே சீலை
யிட்டுறையு மல்லாக்கால் ஈயிருந்து – முட்டக்
குடியாது பூசீக் குலைந்துவிடு மென்றே
துடியாரு மெல்லிடையாய் சொல்.
வீக்கம் விதனமிகு வேதனை தாங்கடினம்
தாக்குவிஷம் வேற்றுநிறந் தானணுகில் - போக்கி
விடுமட்டை தானென் றவனியிலுள் ளோர்க்குத்
திடமாக வேயிதனைச் செப்பு.
தேவைக்கு அதிகமாய் அட்டைகளை விட்டால் அதிக ரத்தம் உறிஞ்சிவிடும்.அதனால் நோயாளி நீரில்லாப் பயிர் போல வாட்டமடைந்து உயிர் துறப்பதற்கு வழியுண்டு.
வேண்டிய அளவு இரத்தம் வெளிப்படாவிட்டால் மீண்டும் அட்டையை விடலாம். ஆனால் நோயாளி மயக்க மடைந்தால் நிறுத்தவேண்டும். பிறகு மறுநாள் அட்டையை விடலாம். மேலும் சுடுநீர் கொண்டு ஒற்றடமிட கடிவாயினின்றும் இரத்தம் வெளிவரும்.
ஒரு முறை பயன்படுத்திய அட்டையை குறைந்தது ஏழு நாட்களுக்குள் திரும்ப சிகிச்சைக்கு பயன்படுத்தக் கூடாது. அதற்கு தேவையான ஓய்வு கொடுக்க வேண்டும், மாறாக அடுத்தடுத்து உபயோகித்தால் அது நச்சுத் தன்மையுடையதாகி விடுமாம்.
அதைப் போலவே அட்டையைப் பாதுகாக்கும் நீரானது மூன்று அல்லது நான்கு நாட்களுக்கொரு முறை மாற்றப்பட வேண்டும். அல்லாவிடில் அவ்வட்டை சோம்பலடைந்து நாளடைவிற் பயன்படாற் போய்விடும் என்கிறார்.
அட்டையைக் கடிக்க விட்டிருக்கும்போது அதன் மீது ஈரத்துணியை போடவேண்டுமாம். இன்றேல் ஈ மொய்க்கும். அதனால் அட்டையானது செம்மையாய்க் குடிக்காது.
அட்டைகள் தவறுதலாக மூக்கு, எருவாய், கருவாய் க்குள் சென்றுவிட்டால் அவ்வழிகளில் காடி நீரைப் பாய்ச்சினாலும், உப்புப் பொடியைத் தூவினாலும் அட்டை வெளி வந்து விடுமாம்.
அட்டைகளினால் தீரக்கூடிய சில முக்கிய நோய்களும் அந்நோய்களில் விடுவதற்குரிய இடங்களும்
2. குருதி மூலத்தால் வருந்துகிற ஒருவனுக்குக் குருதி தடைபடுவதினால் ஏற்படும் தலைவலியை நீக்குதற்கு அட்டையை எருவாயைச் சுற்றி விடலாம்.
3. கருப்பையில் ஏற்படும் கோளாறுகளுக்கும், சூதக வலியைத் தீர்ப்பதற்கும் தொடையின் உட்புறத்தில் அட்டையை விடலாம்.
4. அடிபட்ட வீக்கங்கள், கட்டிகள், கிரந்தி, வீக்கங்கள் ஆகிய நோய்களுக்கு அட்டைகளை பாதிக்கப் பட்ட இடத்தில் விடலாம்.
5. குழந்தைகளுக்கு உண்டாகும் கக்குவான் இருமல் இருந்தால் அட்டையை முதுகு நடுவின் மேல்புறத்தில் விடலாம்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



4 comments:
சுவாரஸ்யமான ., வியப்பான தகவல்..!
வியப்பான தகவல்கள்!
நன்றி
Its incredible
Hi,
will you please share the source for your articles. Really nice. I have gone thro' few books written by Tamil authors. But its like tips and tricks written by Sithargal.
will you please share the books available in shops which are directly taken from sitarkal songs.
Regards,
JP
Post a Comment