தமிழல் மருத்துவம் எனப்படும் சித்த மருத்துவத்தில் 32 வகை அகமருந்துகள் உள்ளன என்பதை பார்த்தோம். கடந்த இரண்டு தினங்களில் முதல் 14 வகை மருந்துகளைப் பற்றி பார்த்தோம். இன்றைய பதிவில் 15 முதல் 20 வரையிலான மருந்துவகைகள் பற்றி பார்ப்போம்.
15. எண்ணெய் அல்லது தைலம் - எள் + நெய் என்பதே எண்ணெயாகும். எண்ணெய் என்பது நல்லெண்ணையையே குறிக்கும். எள் என்பதை 'திலம்' என்று வடமொழியில் கூறுவர். திலத்தால் உண்டானதை தைலம் எனக் கூறுவர். இக்காலத்தில் எல்லா வகையான நெய்களையும் எண்ணெய் என்றே குறிப்பிடுகின்றனர்.
தேவையான சரக்குகளைப் பொடித்து எள் நெய் சேர்த்துப் பக்குவத்தில் காய்ச்சி எடுப்பதே எண்ணெய் ஆகும். இவை தயார் செய்யும் முறையைக் கொண்டு பன்னிரெண்டு வகையாக வகைப்படுத்தப்படும்.. அவை..
கொதிநெய் - ஆமணக்குமுத்து முதலியவற்றை வறுத்து, இடித்து நீரில் கலக்கி அடுப்பில் ஏற்றிக் கொதிக்க வைப்பதால் உண்டாவது.
உருக்கு - வெண்ணெய், கோழிமுட்டைக்கரு முதலியவைகளை உருக்குவதால் உண்டாவது.
புடநெய் அல்லது குழிப்புட நெய் - அடியில் துளையிட்ட பானையில் சேங்கொட்டை, சிவனார்வேம்பு முதலியவற்றை பக்குவப்படி செயது நிரப்பி, மேலே மூடி மண்சீலை செய்து ஒரு குழி தோண்டி அடியில் ஒரு பாத்திரத்தை வைத்து மேலே சரக்குள்ள பானையை வைத்து புடம் போடுவதால் அடியில் இருக்கும் சட்டியில் இறங்கி இருப்பது.
சூரிய புட நெய் - எள்ளுடன் சேர்த்து அரைத்த கல்க மரந்தை (சூரிய) வெய்யிலில் வைத்து அந்த வெப்பத்தின் மூலம் உண்டாக்குவது.
தீ நீர் நெய் - சந்தனக்கட்டை முதலியவைகளைத் தூளாக்கிப் பட்டி கட்டித் தண்ணீரில் இட்டு இறக்குகின்ற தீ நீரினால் உண்டாவது.
மண் நெய் - சேறில்லாத நிலத்தில் இருந்து தானாகவே கொப்பளித்து உண்டாவது.
மர நெய் - மரத்தில் வெட்டப்படும் இடத்தில் உண்டாவது.
சிலை நெய் - உயர்ந்த மலைகளிலிருந்து வழிந்து வருவது.
நீர் நெய் - புழுகுச் சட்டம் முதலியவைகளை இடித்து, நன்றாக நசுக்கி தண்ணீரில் ஊற வைப்பதனால் உண்டாவது.
ஆவிநெய் - மட்டிப்பால், சாம்பிராணி முதலிய சரக்குகளை நெருப்பில் காயந்த மண் சட்டியில் போட்டு அதன் மேல் தண்ணீர் நிறைந்த தட்டு ஒன்றை வைக்க அந்தப் புகையால் தட்டின் அடிப்பாகத்தில் உண்டாவது.
சுடர் நெய் - கெந்தகம் முதலிய சரக்குகளை அரைத்துப் புதுத்துணியில் தடவி இரும்புக் கதிரி சுற்றிக் கட்டி அதை ஒரு முனையில் கொளுத்தி பெறப்படுவது.
பொறிநெய் - எள், கடலை முதலிய விதைகளிலிருந்து செக்கு போன்ற பொறி (இயந்திர) கருவிகளால் எடுக்கப்படுவது.
இந்தப் பன்னிரண்டு வகை நெய்களும் பயன்படுத்தும் முறையைக் கொண்டு ஐந்து வகையாகப் பிரிக்கப்படும்.
முடி நெய் - தலைக்கு இடுகின்ற நெய்.
குடி நெய் - உள்ளுக்குக் குடிக்கும் நெய்.
பிடி நெய் - தோல் மீது தடவிப் பிடிக்கும் நெய்.
தொளை நெய் - உடலில் உள்ள ஒன்பது துவாரங்களில் இடுகின்ற நெய்.
சிலை நெய் - புரைகளின் வழியாக ரத்தம், சீழ் முதலியவைகளை ஒழுகச் செய்யும் கெட்ட ரணங்களுக்கு இடுகின்ற நெய்.
16. மாத்திரை - மாத்திரை என்றால் அளவு என்று பொருள். எந்த அளவில் மருந்து கொடுக்க வேண்டுமோ அதற்குரிய அளவுக்குரியது மாத்திரை எனப்படும் உருண்டையாக இருப்பதால் உண்டை என்பர்.
சில சரக்குகளைச் சேர்த்து சாறுகள் அல்லது குடிநீர்களால் அரைத்து அளவாக உருட்டி உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்வது.
17. கடுகு - மருந்துச் சரக்குகளை நெய் முதலியவைகளுடன் சேர்த்துக் காய்ச்சவும். அச்சரக்குகள் திரண்டு வரும்போது (கடுகு பதத்தில்) அதை உண்டு விடுவது. வடியும் நெய்யை மேல் பூச்சாகப் பூசுவது.
18. பக்குவம் - பாடம் செய்வது, பாவனம் செய்வது எனவும் அழைப்பர். கடுக்காய்போன்ற சில சரக்குகளை அரிசி கழுவிய நீரில் ஊறப்போட்டு மென்மையான பிறகு மோர், எலுமிச்சம்பழச்சாறு சேர்த்துப் பக்குவம் செய்து கொள்வது.
19. தேனூறல் - இஞ்சி, நெல்லிக்காய், கடுக்காய் முதலியவற்றை நீரில் ஊறவைத்து எடுத்து நன்றாக உலர்த்திக் கொண்டு சர்க்கரைப் பாகு அல்லது தேனில் ஊற வைத்துத் தயாரிப்பது.
20. தீநீர் - சரக்குகளைச் சேர்த்து வாலையிலிட்டு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து எரித்து இறக்குவது தீநீர் ஆகும்.
நாளைய பதிவில் மீதமிருக்கும் 12 வகை அகமருந்துகளைப் பற்றி பார்ப்போம்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



3 comments:
நல்லதோர் முயற்சி. வாழ்த்துக்கள். பெருமைப்படுகிறேன் உன்னை நினைத்து. வாழ்க உன் தொகுப்புகள். வளர்க இத்தலம்
அருமை..
நிலா தன்னுளே கொண்டுள்ள அத்துணை எழிலும் குளுமையும் போல....
உங்கள் உல்லே இவளவு சிந்தனையும் ஆற்றலும்முமா....!!!
வியர்க்கிரேன் தொழி...!!!!
என்னினிய காலை வணக்கம்...
Post a Comment