நமது முன்னோர்கள் சுவையினை இனிப்பு, புளிப்பு, உறைப்பு, துவர்ப்பு, கசப்பு, உவர்ப்பு என ஆறாக பிரித்து கூறியிருப்பதை முன்னரே பார்த்தோம். இத்தகைய சுவையுடைய உணவுப் பொருட்களை சரியான விகிதத்தில் எடுத்துக் கொள்வதன் மூலம் நமக்கு உடலுக்குத் தேவையான தாதுக்கள் கிடைக்கின்றன. மேலும் இந்த சுவைகளை நமது நாக்கு உணரும் போது நமது குடலில் உள்ள சுரப்பிகள் தூண்டப் பட்டு ஜீரணமாகத் தேவையான நீர்மங்கள் சுரக்கிறது.
நாள்தோறும் உணவில் அறுசுவையுடைய உணவுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் ஆரோக்கியவாழ்வு வாழ முடியும் என்கிறார் தேரையர். மேலும் இந்த உணவுகளை எந்த வரிசையில் உட்கொள்வது பற்றியும் தனது "பதார்த்த குண சிந்தாமணி" என்னும் நூலில் பின் வருமாறு விளக்குகிறார்.
ஆதி யினிப்புநாடு வாம்பிரநீ ருப்பொடுசா
காதி யுரைப்பப்பா லந்தத்திற்-கோதிறுவர்ப்
பாந்ததியுப் பூறியகா யாதிவகை சேருணவை
மாந்ததிக கத்தையுறு வாய்.
முதலில் இனிப்புச் சுவையுடைய உணவுப் பொருட்களையும், அடுத்து புளிப்புச் சுவையுடைய உணவுப் பொருட்களையும், அடுத்து நீருப்புச் சுவையுடைய உணவுப் பொருட்களையும், அடுத்து கீரை முதலானவைகளுடன் காரச் சுவையுடைய உணவுப் பொருட்களையும், உட்கொண்டு முடிவில் துவர்ப்பு, தயிர், ஊறுகாய், என்ற வரிசையில் உணவை உட்கொண்டால் எப்போதும் சுகத்தையே கொடுக்கும் என்கிறார்.
சரி இந்த உணவுகளை எவ்வளவு எடுத்துக் கொள்வதாம்?, அதனையும் தேரையர் வரையறுத்துக் கூறியிருக்கிறார்.
முக்கா லுணவின்றி யெத்தேகி கட்கு முழுவுணலி
லக்கா ரணமன்ன சாகாதிகூடி யரையதிற்பால்
சிக்கா வமுதம்பு தக்கிரங் காலுண்டிச் சேடம்வெளி
வைக்கா விடிலுண்டி வேகா தனலும் வளியுமின்றே
சிறியவர், பெரியவர், ஆரோக்கியமானவர், நோயாளி என பாகுபாடில்லாமல் அனைவரும் முக்கால் வயிறு அளவுக்கே உணவு எடுத்துக் கொள்ள வேண்டுமாம். அதாவது சோறு, பலாகாரம் போன்ற பதார்த்தங்கள் அரை வயிறும், பால், மோர், நீர் போன்றவை கால்வயிறு அளவுக்கு எடுத்துக் கொள்ளக் கூறுகிறார்.
ஒரு போதும் முழுவயிறு உணவை எடுத்துக் கொள்ளக் கூடாது என்கிறார். அப்படி முழு வயிறு உணவு உட்கொண்டால் சாப்பிட்ட உணவைச் சீரணிக்கத் தக்க அக்கினியும் வாயுவும் சஞ்சரிப்பதற்கு இடமிருக்காது போய்விடும் என்கிறார்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



4 comments:
நல்ல பதிவு தோழி.
அனைவரும் பின்பற்றி
நலமுடன் வாழவேண்டும்
Good post
like this article
Thanks for reminding us to follow our traditions. No wonder, they said that UNavE MarundhU..:)
Post a Comment