அன்பே சிவம்....

Author: தோழி / Labels:


“ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்” என்பது டால்ஸ்டாயின் பிரபலமான வாசகம். அதாவது நம்மினும் வறிய ஏழைகளுக்குத் நம்மாலான உதவியை அன்புடன் செய்திடும் பொழுது அவர்கள் உள்ளம் நிறையும், அப்போது நன்றிப் பெருக்கினால் அவர்களின் முகத்தில் தெரியும் கபடமில்லாத புன்னகையில் இறைவன் தெரிவார் என்பதே பொருள். அந்த வகையில் அன்பின் பெருமையை உலகுக்குச் சொன்ன வாசகம் இது.

அன்பே கடவுள் என்று அனைத்து மதங்களும் வலியுறுத்துகிறது.  உலக பொதுமறையான நமது திருக்குறளில் கூட அன்புடைமைக்கு என தனி அதிகாரமே உள்ளது. இத்தகைய மாசற்ற அன்பின் பெருமையை, மகத்துவத்தினை அகிலத்துக்கு முதலில் சொன்னவர்கள் நம் சித்தர் பெருமக்கள் என்றால் மிகையில்லை.

அன்பின் மகத்துவத்தினை திருமூலர் பின்வருமாறு விவரிக்கிறார்.

’’அன்பு சிவம் இரெண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவதொரு மறிகிலார்’’              

- திருமந்திரம்.

அன்பும், சிவமும் வெவ்வேறு என பிரித்துப் பார்ப்பவர்களை அறிவே இல்லாதவர்கள் என்கிறார். அன்பையும், சிவமாகிய இறை நிலையையும் பிரிக்கவே முடியாது, அன்புதான் சிவம் என ஆணித்தரமாக கூறுகிறார் திருமூலர்.

பசி, தாகம் ஆகியவற்றை மறந்து பல காலம் தவம் இயற்றி, உடலை வருத்தினால்தான் இறைஅருளைப் பெறமுடியும் என பலரும் நம்புகின்றனர். இந்த நம்பிக்கையை திருமூலர் நிராகரிப்பதோடு இறைஅருளைப் பெற எளிய வழி ஒன்றினையும் தன் பாடலில் குறிப்பிடுகிறார்.

என்பே விறகா இறைச்சி யறுத்திட்டுப்
பொன்போல் கனலில் பொரிய வறுப்பினும்
அன்போடு உருகி அகம் குழைவார்க் கன்றி
என்போல் மணியினை எய்த ஒண்ணாதே 

-  திருமந்திரம்.

உடலை வருத்தி எதைச் செய்தாலும் இறைவனை அடைய இயலாது. மாறாக நெஞ்சம் உருகி அன்பு மயமாய் குழைந்தால் மட்டுமே இறை நிலையினை அடைவது சாத்தியம் என்கிறார் திருமூலர்.

மேலும் எத்தகையவர் மீது இறைவன் அன்பு செலுத்துவார் என்பதையும் திருமூலர் பின் வருமாறு கூறுகிறார்.

’’கொழுந்து அன்பு செய்து கூரவல்லார்க்கு
மகிழ்ந்து அன்பு செய்யும் அருள் சாது ஆமே’’  

 - திருமந்திரம்.

எவர் ஒருவரால் சக உயிர்கள் மீது அன்பு செய்ய இயலுகிறதோ, அவர் மீதே இறைவன் அன்பு செலுத்துவார் என்கிறார். இறை அருளை உங்கள் பக்கம் ஈர்த்துக் கொள்ள பிறர் மீது அன்பு செலுத்துவதை விட எளிய வழி வேறு எதுவுமே இல்லை என்கிறார் திருமூலர்.

டால்ஸ்டாய் சொன்னதை உலகம் முழுக்க கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இவருக்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே அன்பின் மகத்துவத்தை உலகத்தாருக்குச் சொல்லி வைத்த நம் முன்னோரின் பெருமையை நாம் எத்தனை தூரம் நினைவில் கொண்டிருக்கிறோம் அல்லது அதன் வழி நிற்கிறோம் என்ற கேள்விக்கான பதிலை உங்களின் தீர்மானத்துக்கே விட்டு இந்தப் பதிவினை நிறைவு செய்கிறேன்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

8 comments:

revathy said...

now a days peoples are very busy and they dont know how to show love to others.they r not having time to go to temple also.then how they will love god mam.article is very nice.please try to follow .
S.Revathy

tamilvirumbi said...

தோழி ,
அழகான ,அன்பான பதிவு.திருமந்திரத்தில் இருந்து ,மேற்கோள் காட்டி நிறைவு செய்தது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.மேலும்,தமிழர்கள் ,சித்தர்கள் ,நமக்கு தந்த ,
மருத்துவமுறை இன்று சரிவர பின்பற்ற படுவதில்லை என்பதை காணும்பொழுது மனம் புளம்காகிதம் அடைகின்றது .தாங்கள் ஒரு மருத்துவர்.தாங்களாவது ,
சித்த மருத்துவத்தை ,இலங்கையில் பிரபலபடுத்துங்கள்.மிக்க நன்றி .

விஸ்வநாத் said...

மழை பொழியும் ரகசியத்தை
ஆண்டாள் தன் திருப்பாவையில்
"ஆழி மழைக்கண்ணா ... " பாடலில் பாடவில்லையா;
அது புரியாது
ஆங்கிலேயன் சொன்னவுடன் ஏற்றுக்கொண்டோம்.
கொடுமை தான். என் செய்ய ?

கோவிந்தராஜு.மா said...

அணைத்தயும் உலகிற்கு முதலில் சொன்னவர்கள் சித்தர்பெருமக்கலே இதுவே உண்மையும் நன்றி தோழி

Lingeswaran said...

உலக நாயகனும் சொல்லிப்பாத்தாரு......ஏதோ இப்ப கொஞ்சம் பரவாயில்ல...

ravi said...

idhayathil

ravi said...

good

Dr.Anburaj said...

Please send to ahlulbaithtamil@gmail.com

Post a Comment