ஆசிரமங்களின் வகைகள்....தொடர்ச்சி!

Author: தோழி / Labels: ,


பிரமச்சாரி ஆசிரமம்,கிரகஸ்த ஆசிரமம்,சன்யாச ஆசிரமம்,வானப்பிரஸ்த ஆசிரமம்,அதிவர்ன ஆசிரமம் என ஐந்து வகையான ஆசிரமங்கள் இருப்பதாக முந்தைய பதிவில் பார்த்தோம். இவை ஒவ்வொன்றும் ஒரு படி நிலையாக கருதப் பட்டது என்பதையும் பார்த்தோம். இன்றைய பதிவில் முதல் மூன்று வகைகளைப் பற்றி அகத்தியர் கூறியுள்ள வரையறைகளை பார்ப்போம்.

பிரமச்சாரி ஆசிரமம்.

அறிவான புலத்தியனே சொல்லக்கேளு
     அருமையுள்ள பிர்மசாரி ஆச்சிரமந்தன்னை
நெறியாக ஒருபோது பிச்சைகொண்டு
      நேமமுட னனுதினமும் வேதம்பார்த்து
திறிகால மறவாமல் நிஷ்டை நேமம்
      செய்துமன தறிவாலே யோகஞ்செய்து
குறியாகச் சிகைவளர்த்து எண்ணைதள்ளிக்
      கூர்மையுள்ள பிர்மஆச் சிரமந்தானே.


தானாகத் தானவனாய் மனதுகூர்ந்து
     சங்கையுடன் யிம்முறைதான் தவறாமல்தான்
கோனான குருபதியில் மனதுகூர்ந்து
     குறிப்புடனே செபிக்கிறதோர் மந்திரங்கேளு
தேனான அமுர்தம்டா அம்கிலிசிம்மென்று
      சிவசிவா தினம்நூறு செபித்தால்மைந்தா
ஊனான தேகமடா பிர்மமாச்சு
      உத்தமனே பிரமசூச் சிரமஞ்சித்தே.

பிரம்மச்சரிய ஆசிரம வாசிகள் தலைக்கு எண்ணை பயன்படுத்தாமல் முடி வளர்த்திருப்பார்களாம். பிச்சை எடுத்து ஒரு வேளை உணவு மட்டும் கொள்வார்களாம். நியம நிஷ்டைகளை தவறாது கடைபிடிப்பவர்களாகவும் இருப்பார்கள் என்கிறார்.

மேலும் "அம் கிலி சிம்" என்னும் மந்திரத்தை தினமும் நூறு உரு செபித்து வருவார்களாம் அதனால் அவர்கள் உடல் பிரம்ம சொரூபமாகுமாம் என்கிறார். இப்படி பிரம்ம சொரூபமானால், இந்த படி நிலையைக் கடந்தவர்களாகி அடுத்த படிநிலைக்கு செல்லும் தகுதியை அடைவார்கள் என்கிறார் அகத்தியர்.

கிரகஸ்த ஆசிரமம்.

சித்தியுடன் பிர்மசூச் சிரமஞ்சொன்னேன்
      சிவசிவா கிரகஸ்த னாச்சிரமங்கேளு
பத்தியுடன் கொலைகளவு காமந்தீமை
       பாராமல் சமுசார மார்க்கமாகி
சுததமுடன் சகலவுயிர் தானாயெண்ணி
       சுகிர்தமுடன் தர்மங்க ளீய்ந்துகொண்டால்
வெத்தியுடன் சகலசவு பாக்கியம்பெற்று
       விளங்குமடா கிரகஸ்த னாச்சிரமங்காணே.


காணவே கிரகமதி லிருந்துகொண்டு
      காசினியில் தர்மவா நாகிமைந்தா
பூணவே சற்குருவின் பாதம்போற்றி
       புத்தியுடன் செபிக்கிறதோர் மந்திரங்கேளு
தோணவே தானிருந்து புருவமேவி
       சுத்தமுடன் ஓங்றீங் அஙுங்கென்று
பேணவே தானிருந்து செபித்தாயாகில்
       பிலக்குமடா கிரகஸ்த னாச்சிரமம்பாரே.

மனைவி மக்களுடன் இணைந்த குடும்ப வழ்வாக இருந்தாலும் கொலை, களவு, காமம் நீங்கியதாக சகல சௌபாக்கியங்களுடன் வாழ்பவர்களைக் கொண்டது கிரகஸ்த ஆசிரமம்.இவர்கள் பிற உயிர்களையும் தம்தென எண்ணி எவருக்கும் தீங்கிழைக்காமல் குருவின் பாதம் பணிந்து வாழ்பவராக இருப்பார்களாம். 

"ஓங் றீங் அஙுங்" என்னும் மந்திரத்தினை தினமும் நூறு உரு செபித்து வருவார்களாம். தொடர்ந்து இப்படி செபித்து வருவதன் மூலம் இந்த படி நிலையைக் கடந்தவர்களாகி அடுத்த படிநிலைக்கு செல்லும் தகுதியை அடைவார்கள் என்கிறார்.

சன்யாச ஆச்சிரமம்.

பாரப்பா கிரகிஷ்த னாச்சிரமஞ்சொன்னேன் 
     பதிவான சன்யாசி ஆச்சிரமங்கேளு
சேரப்பா சிகநூல்கள் அகற்றிமைந்தா
     தேகசுத்தி காயாசம் செய்துகொண்டு
காரப்பா தற்பனஓ மங்கள்செய்து
     காலறிந்து சிவயோகக் கருத்தில்நின்று
நேரப்பா பிச்சைகொண்டு அறிவில்நின்றால்
    நிலைத்துதடா சன்யாச ஆச்சிரமங்காணே.


தானான சன்யாசம் பெற்றோர்தானும்
    தன்மையுட னிம்முறைகள் தவறாமற்றான்
தானான பதிநோக்கித் தானேதானாய்
    தன்மையுடன் செபிக்கிறதோர் மந்திரங்கேளு
தானான விஞ்சையுட ஓம்அய்யும் கிலியுஞ் சவ்வும்
    தன்மையுடன் தினம்நூறு செபித்தாயாகில்
தானான சன்யாசி யாச்சிரமம்மைந்தா
    தன்மையுடன் தானாகத் திறக்குங்காணே.

இத்தகைய ஆசிரம வாசிகள் தேகசுத்தியுடன், தலையை மழித்து துறவுக் கோலத்தில் இருப்பார்களாம். ஹோமம், தர்பனம் போன்றவைகளை செய்கிறவர்களாகவும், தினமும் பிச்சை எடுத்தே உண்பவர்களாகவும் இருப்பார்களாம்.

"ஓம் ஐயும் கிலியுஞ் சவ்வும்" என்னும் மந்திரத்தினை தினமும் நூறு உரு செபித்து வருவார்களாம். தொடர்ந்து. இப்படி செபித்து வருவதன் மூலம் இந்த படி நிலையைக் கடந்தவர்களாகி அடுத்த படிநிலைக்கு செல்லும் தகுதியை அடைவார்கள் என்கிறார் அகத்தியர்.

அடுத்த பதிவில் கடைசி இரு வகைகளைப் பற்றி பார்ப்போம்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

8 comments:

revathy said...

nice mam.not only article ,you also mam.continue mam
S.Revathy m.pharm
vijayawada

revathy said...

nice mam.not only article ,you also mam.continue mam
S.Revathy m.pharm
vijayawada

Statsfact said...

Thanks

srini srirangam said...

Srini@ srirangam: VANAKKAM THOZHI. IT IS QUITE AMAZING .THANK U. I FOUND UTAL SABHA NIVARTHI MANTHRAM .THANK U AGAIN

sury said...

After grahasthaasramam, comes vaanaprastha, where the individual prepares himself to renunciate worldly pleasures to rid himself of the pressures so that he may embrace sanyasa in due course. Is it that during vanaprastha, one also shaves his head but does all the tharpana etc.?
subbu rathinam

Inquiring Mind said...

அருமையான பதிவு தோழி..
இது எல்லா மக்களுக்கும் பொதுவான வாழ்க்கை முறையா ? இல்லை ஆன்ம மார்க்கத்தில் செல்பவர்களுக்கு மட்டுமா?

tamilvirumbi said...

தோழி ,
ஆன்மீக தேடலில் உள்ளவர்களுக்கு ஒரு அரிய செய்தியாக தங்களின் பதிவு அமைந்துள்ளது .மிக்க நன்றி .

jagadeesh said...

சன்யாச ஆசிரமம் புத்த மத துறவு முறைக்கு சரியாக உள்ளது.

Post a Comment