மூலாதாரத்தில் துவங்குகிற குண்டலினியின் பயணத்தின் உச்ச நிலையான துரியம் பற்றி இன்று பார்ப்போம். இதற்கு சகஸ்ரதளம் என்கிற மற்றொரு பெயரும் உண்டு.
மூலாதாரத்தில் இருந்து விழித்தெழுந்த குண்டலினி அனாகத சக்கரத்தை அடையும் போது அதனை அக்னி குண்டலினி என்றும், அனாகதத்தில் இருந்து எழுந்து மேலேறி ஆக்ஞா சக்கரத்தை மலர்த்திய நிலையில் அதனை சூரிய குண்டலினி என்றும், ஆக்ஞா சக்கரத்தை கடந்து துரியத்தை நோக்கி பயணிக்கும் போது அதனை சந்திர குண்டலினி என்றும், துரியம் மலர்ந்த நிலையில் அதனை துரிய குண்டலினி என்றும் அழைக்கின்றனர்.
துரியம் பற்றி போகர் பின் வருமாறு விளக்குகிறார்.
தானென்ற ஆக்ஞையை தாண்டி அப்பால்
தனிததோர் எட்டுவிரல் மேலே கேளு
கோனான குருபத்ந்தான் கூடிப்பாரு
குறிப்பான இதழ்தான் ஓர்ஆயியிரதெட்டு
ஆசான நடுமையம் ஐங்கோணமாகும்
அகாரமொடு உகாரமொடு மகாரமாகும்
நானான நாதமொடு விந்து ஐந்தும்
நலத்தஐங் கோணத்தில் நிற்கும்பாரே.
- போகர்.
ஆக்ஞா சக்கரத்தில் இருந்து எட்டு விரற்கடை மேலே நமது தலையின் உச்சியில் இந்த சக்தி ஆதார மையம் அமைந்திருக்கிறது. நமது மூளை இதற்கு தொடர்பான உறுப்பாக கூறப்பட்டிருக்கிறது.இந்த சக்கரமானது ஆயிரம் இதழ்களைக் கொண்ட தாமரை மலரை போன்றது என்கின்றனர்.அதாவது ஆயிரம் யோக நாடிகள் இந்த சக்கரத்தில் இருந்து வெளிக் கிளம்புகின்றன.
போகர் தனது பாடலில் விவரித்திருக்கும் துரிய சக்கரத்தின் மாதிரி படம் இது.
ஆக்ஞா சக்கரத்தில் இருந்து துரிய நிலைக்கு குண்டலினியை எழுப்புவது என்பது குண்டலினி யோகத்தின் மிக உயரிய செயல்பாடு. இதற்கென பிரத்யேக பயிற்சிகள் கூறப் பட்டிருக்கின்றன. அவ்வாறு உயர்த்தப் பட்ட சந்திர குண்டலினி மலர்த்திய துரியசக்கரம் தரும் அனுபவத்தை நம் போன்ற சாமான்யர்களின் வார்த்தைகளால் விவரிக்க இயலாது. பரவச நிலை என்பதே நமது ஆகக் கூடிய வ்ருணனையாக இருக்கும்.
கவனத்தை குவித்து, அந்த கவனத்தையே கவனிக்கிற பயிற்சியின் உச்சத்தில் அந்த கவனமே கரைந்து போய்விட்டால்..... சித்தர்களோ இதனை நிலையற்ற நிலை என்கின்றனர். அதாவது நம்முடைய விழிப்பு நிலை, கனவு நிலை, முழுமை நிலை என்கிற மூன்றும் ஒன்றில் ஒன்றாய் குவிந்து, கரைந்து போகிற நான்காவது பரவச நிலை. இந்த நிலையில் தானே தேடுகிறவனாகவும், தானே தேடலாகவும், தானே தேடு பொருளாகவும் இருப்பதையே துரிய நிலை அல்லது சமாதி நிலையாக சித்தர் பெருமக்கள் குறிப்பிடுகின்றனர்.
ஔவையாரும் கூட இந்த அனுபவத்தை இப்படி கூறுகிறார்....
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
குண்டலினி என்கிற மகா சமுத்திரத்தில் நான் உணர்ந்த ஒன்றிரண்டு துளிகளை மட்டுமே இதுவரை உங்களோடு பகிர்ந்திருக்கிறேன்.இந்த தொடரில் பிழையேதும் இருப்பின் அதைப் பொறுத்து என்னை திருத்திட வேண்டுகிறேன். குண்டலினி பற்றி ஒருவர் முழுமையாக அறியவும், புரியவும் பல காலம் பிடிக்கும். தொடர்ச்சியான தேடுதல் மட்டுமே நம்மை சரியான இடத்திற்கு கொண்டு சேர்க்கும்.
எதிர்காலத்தில் குருவருள் அனுமதிக்குமானால் இந்த தொடரின் இரண்டாம் பகுதியாக இதனுள் உறைந்திருக்கும் நுட்பங்களையும் அதனை கையாளும் வகைகளையும் பகிர்ந்திட முயற்சிக்கிறேன். இனிவரும் நாட்களில் இந்த தொடரினை மின்னூலாக்கி இங்கே பொதுவில் பகிர்ந்து கொள்கிறேன்.
எல்லாம் வல்ல குருநாதரின் அருளினாலே இது சாத்தியமாயிற்று. அவரின் பாத கமலத்தில் இந்த முயற்சியை சமர்ப்பித்து முதல் பாகத்தை நிறைவு செய்கிறேன்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...








