கூடு விட்டு கூடு பாய்தல்... நிறைவுப் பகுதி

Author: தோழி / Labels:

சித்தர் பெருமக்கள் பலரும் கூடு விட்டு கூடு பாய்ந்த தகவல்கள் நமக்கு பாடலாக கிடைத்திருக்கின்றன. தன்னுடைய உடலில் இருந்து உயிரைப் பிரித்து உயிரில்லாத மற்றொரு உடலுக்குள் நுழைந்து அதனை இயக்கத்திற்கு கொண்டு வருதலையே கூடு விட்டு கூடு பாய்தலாக அறிகிறோம். அந்த உடலில் சேர்ந்த பின்னர் தங்களின் பூர்வ கதைகள் அவர்களுக்கு நினைவில் இருந்ததும், தாங்கள் புகுந்த உடலுக்குறியவனின் கடமைகளையும் நிறைவேற்றியதையும் அறிய முடிகிறது.

கோரக்கர் தன் குகையின் அருகே மாடு மேய்த்துக் கொண்டிருந்த இடையன் நாகம் தீண்டி இறந்து போக, அவன் உடலைப் பார்த்து கதறிய மனைவியின் துயர் நீக்க தன் உடலை மறைத்து வைத்து இடையனின் உடலில் புகுந்து இடைச்சியின் துயர் நீக்கியதாக பின் வரும் பாடல் மூலம் அறிய முடிகிறது.

கண்டதோ ரிடையன் றன்னைக் கதித்ததோர் நாகந்தீண்டி
கொண்டதோ ரிடையன் சாகக் குறித்திடுந் தோழர்கண்டு
விண்டவன் மனையாளுக்கு வேகமாய்ச் சென்று சொல்லப்
பண்டுள்ள விதியோ நான்தான் பாவியோ யென்றுவந்தாள்

வந்தவள் துயர்கண்டு மறுகூடு பாய் வதற்கு
அந்தமா கிரிக்குச் சென்று ஆக்கையைப் பதனஞ் செய்து
நந்தனா மிடையன் கூட்டில் நயமுடன் பாய்ந்து பின்பு
முந்தியுள் ளிடையன் போல மங்கைமுன் வந்தார்.


ஒரு நாள் காட்டில் வேட்டைக்கு வந்த அரசனொருவன் கோரக்கரின் உடலைப் பார்த்து யாரோ இறந்தவர் உடலென எண்ணி தீயிட்டு எரித்து விட்டானாம். பிறகு கோரக்கர் தன் உடலை தேடி வந்த போது அது அழிந்தது கண்டு தனது சீடனான நாகார்ச்சுனனையும், சாணயாகியாரையும் தேடி, அவர்களை அழைத்துக் கொண்டு மூவருமாக ஒவ்வொரு வனமாக சித்தர்களை சந்திக்க சென்றார்களாம். சென்று ஒவ்வொரு வருடமாக ஒவ்வொரு சித்தருடனும் இருந்து குறைவில்லாது கற்பங்களை உண்டு இடையனின் உடலிலேயே வாழ்ந்திருந்தார் என அறிய முடிகிறது.

காசியில் சேனியர் குலத்தில் பிறந்த சட்டைநாதரும் ஞானம் பெற்று, கற்பங்கள் உண்டு பல்வேறு இடங்களைக் கடந்து சதுரகிரியை அடைந்தாராம். அங்கே இறந்து கிடந்த ஒரு பிராமணரின் உடலில் புகுந்து கற்பங்களை உண்டு அந்த உடலை மேம்படுத்தில் அப்படியே வாழ்ந்திருந்தார் என்பதை பின்வரும் பாடல் மூலம் அறிய முடிகிறது.

பெற்றுடன் வாழ்ந்தா ரந்தப் பேர்பெற்ற சட்டைநாதர்
உற்றசேணியர் குலத்தி லுதித்துநெய் தொழிற் படித்து
நற்றமிழ் தேர்ந்து இந்த நானில மெய்க்க ஞானங்
கற்றுமே கற்பங் கொண்டு காசினி தனைவிட் டேகி

விட்டுடன் மலையி லேறி வேதைக ளநேகஞ் செய்து
சட்டம தாக வேதான் சதுரமா கிரியில் வந்து
மட்டுடன் பிராமண தேக மதனிலே நுழைந் துகந்து
திட்டமாய் கற்பங் கொண்டு சிறப்புட னிருந்தார் பாரே.


இடையர் குலத்தில் பிறந்தவரான கொங்கணவர் கற்பங்கள் உண்டு இயல்பாய் வாழ்ந்திருந்த போது மலை மீதேறி அங்கிருந்த பளிங்கர்களுடன் உறவாடியிருந்தாராம். ஒரு சமயம் பளிங்கர் இனத் தலைவன் உயிரிழக்க அவர்களின் துயர் நீக்க தன்னுடல் விட்டு தலைவனின் உடலில் புகுந்து உயிர்ப்பிக்கச் செய்தாராம். மகிழ்ந்த பளிங்கர்கள் அவருடலை எரித்து விட்டனராம். பின்னர் பளிங்கர்களுடன் செடிகொடிகளை தேடி அறிந்து கற்பம் உண்டாக்கி உண்டு அந்த உடலிலேயே வாழ்ந்திருந்தாராம். இந்த தகவல்கள் பின் வரும் பாடல்கள் மூலம் நமக்குத் தெரிகிறது.

உள்ள கொங் கணரு மாதி யிடையனா யுலகந் தன்னில்
மெள்ளவே கற்ப முண்டு வியப்பதாய் மலையில் வந்து
வள்ளலா யிருந்து பேரை வாங்கியே பளிங்க ரோடு
கள்ளமில் லாமல் வாழ்ந்து காட்டினி லிருந்து வந்தார்.


வந்திடும் போதங் கேதான் மலைப்பளிங் கணுமே செத்து
விந்தையாய்ப் போகப் பார்த்து மிகவேதா னிரக்கங் கொண்டு
சந்தோஷ மாகத் தம்தன் சரீரத்தை வைத்து விட்டு
இந்தநல் சரீரந் தன்னி லியல்புடன் பாய்ந்து விட்டார்.

விட்டதைப் பளிங்கர் கண்டு மிகவேகொங் கணர்தேகத்தை
கட்டையில் வேகவைத்துக் களிப்புட னிருந்து விட்டார்
திட்டமாய்ப் பளிங்கரோடு சேர்ந்திலை செடிகள் கண்டு
சட்டமாய்த் தெரிந்து கற்பந் தானுண்டு மலையில் வாழ்ந்தார்

மலையிலே வாசஞ் செய்து வந்தன ரங்கங் கேதான்
தொலைதனி லிருக்கும் பூடு துறவுடன் தெரிந்து கொண்டு
வலையினி லகப்படாமல் மலையெலாஞ் சுத்திச் சுத்தி
இலைசெடி மரங்கள் தானும் இயல்புட னறிந்திருந்தார்.


இது போல இன்னும் பல சித்தர் பெருமக்கள் கூடுவிட்டு கூடு பாய்ந்த தகவல்கள் காணக் கிடைக்கின்றன. இந்த தகவல்களின் பின்னால் நிரம்பியிருப்பது சித்தர் பெருமக்களின் மனித நேயம் என்றால் மிகையில்லை. இந்த தகவல்களை எல்லாம் தேடித் திரட்டுவதே இப்போதைக்கு நாம் செய்யக் கூடியதாக இருக்கும். தகவல்கள் எல்லாம் ஒரு ஒழுங்கில் வைத்த பின்னரே அதன் மீதான எந்த ஒரு ஆய்வும், தீர்மானமும் செய்திட முடியும். அந்த வகையில் என்னளவில் இந்த தொடர் ஒரு ஆரம்பப் புள்ளியாக அமையும். எதிர் காலத்தில் குருவருள் அனுமதித்தால் மேலதிக தகவல் திரட்டி தெளிவுகளை பகிர்ந்து கொள்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

8 comments:

tamilvirumbi said...

தோழி,
மிக்க நன்றி .தங்களது படைப்புக்கள் அனைத்தும் மிக நன்றாக இருந்தது .

kimu said...

வியக்கவைக்கும் உண்மைகள்.....
மேலும் தொடர வாழ்த்துக்கள் :)

Sivam said...

நல்ல தகவல் உங்கள் பணி மேலும் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் தங்களின் வலை பூ முகவரியை என் ப்ளொக்கரில் இணைத்துள்ளேன்

geethasmbsvm6 said...

நன்றி தோழி

Rishvan said...

athisiya thagalvalgal... thanks for sharing... please read my tamil blog in www.rishvan.com

baski said...

apoorvamana pathivukku nandrigal
keep it up

THIRUMAL said...

உடல் உயரமாக வளர சித்தர்கள் மருந்து ஏதும் சொல்ல வில்லையா ? எது மருந்து இருந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ் . நன்றி

THIRUMAL said...

உடல் உயரமாக வளர சித்தர்கள் மருந்து ஏதும் சொல்ல வில்லையா ? எது மருந்து இருந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ் . நன்றி

Post a Comment