மூலாதாரத்தில் புதைந்திருக்கும் குண்டலினியை எழுப்பிட பல்வேறு உத்திகள் கூறப் பட்டிருக்கின்றன. பொதுவில் பிராணாயாமம் எனப்படும் மூச்சுப் பயிற்சி, ஆசனங்கள், முத்திரைகள் இவைகளால் குண்டலினியை எழுப்ப முடியுமாம்.
இராஜயோகிகள் சலனமற்ற தியானத்தினாலும், மனப் பயிற்சியினாலும் எழுப்புகின்றனர்.
சாமான்யர்கள் பக்தி அதாவது முழுமையான சரணாகதியின் மூலம் எழுப்புகின்றனர்.
ஞானிகளோ பிரித்து அறியும் மன உறுதியினால் எழுப்புகின்றனர். இதை விவேக வைராக்கியம் என்கின்றனர்.
தாந்திரிகர்கள் மந்திர சக்தியால் குண்டலினியை எழுப்புகின்றனர்.
இவற்றை எல்லாம் விட மிக எளிதான ஒரு முறையும் இருக்கிறது. அதாவது குருவினை பார்த்தல்(தரிசனம்),குருவினால் தொடப் படுதல், ஆசீர்வதித்தல் ஆகியவைகளால் சட்டென குண்டலினி எழும்பும். இத்தகைய தகுதி உடைய குருமார்கள் இப்போது மிகவும் குறைவு. மேலும் அத்தகையவர்கள் இதை எல்லோருக்கும் அருளுவதுமில்லை.
ஆக, நம்மில் உறைந்திருக்கும் குண்டலினியை எழுப்பிட இத்தனை வகைகள் இருக்கிறது. எனினும் நமது உடல் மற்றும் மனப் பக்குவத்திற்கு ஏற்ற வகையை தெரிவு செய்ய குருவினால் மட்டுமே முடியும். அவரே நமக்கு சரியான வழி எது என்பதை உணர்த்துவார். ஒரு வகையில் பார்த்தால் குண்டலினியை எழுப்புவது அத்தனை சிரமம் இல்லாத எளிதான காரியம்தான்.
அப்படியானால் இதில் கடினமான பகுதி எது?
எழுப்பிய குண்டலினியை, முன்பு நாம் பார்த்த ஏழு ஆதார மையங்களின் ஊடாக கொண்டு செல்வதே இதில் கடினமான பகுதி. ஒவ்வொரு நிலையாக உயர்த்தி உச்சந்தலையான துரியம் வரை கொண்டு செல்வது அத்தனை எளிதான செயல் இல்லை. மிகுந்த பொறுமை, விடாமுயற்சி, தூய்மை, இடைவிடாத பயிற்சி உள்ளவர்களுக்கு மட்டுமே இது சாத்தியமாகும். அவர்களுக்கே எல்லா சக்திகளும் சித்திக்கும்.
எழும்பிய இந்த குண்டலினியானது ஒவ்வொரு ஆதார மையத்தையும் அடையும் போது அந்த மையம் திறக்கிறது. இது மெல்ல மெல்லவே நிகழுமாம். அப்போது தாமரை வடிவத்தில் உருவகப் படுத்தப் படும் இந்த சக்தி மையம், தலை அல்லது முகம் மேல்நோக்கி நிமிரும். அதைத்தான் சக்கரம் மலர்கிறது என்கிறார்கள். இனிமுதல் இந்த அதார மையங்களை சக்கரம் என்று அழைப்போம்.
எழும்பிய குண்டலினியானது ஒவ்வொரு சக்கரத்தையும் கடந்து செல்லும் போது ஒவ்வொரு நிலையிலும் ஒரு சக்தி வெளிப்படுகிறது. அப்போது ஏற்படும் சக்தியைத்தான் சித்தி என்கிறோம்.
இது பற்றி இனிவரும் பகுதிகளில் காண்போம்.
சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...
Post a Comment



0 comments:
Post a Comment