சதுரகிரி - தொடர்கிறது மலைப் பயணம்!

Author: தோழி / Labels: ,

தாணிப் பாறையிலிருந்து கிளம்பி அத்திரி மகரிஷி மற்றும் மச்சமுனிவரின் ஆசிரமங்களின் வழியே தனது ஆசிரமம் வரை நம்மை அழைத்து வந்த கோரக்கர், சதுரகிரி மலையில் வாசம் செய்கிற மற்ற பிற சித்தர்களின் ஆசிரமங்களுக்கு செல்லும் வழியை தெளிவாக கூறியிருக்கிறார். அவர் வழியில் பயணத்தை இன்றும் தொடர்வோம்.

கோரக்கரின் ஆசிரமத்திற்கு தெற்குப் பக்கமாய் அம்புவிடும் தூரத்தில் “மஞ்சள் பூத்தவளை” என்னும் மூலிகை இருக்கிறதாம்,அதன் மேற்குப் பக்கத்தில் உள்ள பாதையில் அம்புவிடும் தூரத்தில் கசிவுத்தரை இருக்கிறது. இங்கிருந்து வடக்குப் பக்கம் போனால் மேடு ஒன்றும் அதனையொட்டி ஒரு ஓடையும் வரும் என்கிறார். இந்த ஓடைக்கு வடக்கே சமதளமான மண்தரையும் பக்கத்தில் பாறையும் இருக்குமாம்.

இந்த பாறையின் வடக்கே இருக்கும் ஓடையின் வடக்குப் பக்கத்தில் அம்புவிடும் தூரத்தில் அரிய மூலிகையான “அமுதவல்லிச் செடி” இருக்கும். இந்த செடிக்கு நேர்வடக்காய் நடந்தால் கிழக்குப் பக்கம் போகும் பாதையில் நடந்தால் எதிர் வரும் மேட்டில் இரட்டை லிங்கம் இருக்கும் என்கிறார். இந்த லிங்கத்துக்கு தென்கிழக்கு மூலையில் ஆற்றையொட்டி யாக்கோபு சித்தர் என அறியப்படும் இராமதேவரின் ஆசிரமம் இருக்கிறது. இங்கே “ரோம விருட்சமும்” அதன் பக்கத்தில் நாகபடக் கற்றாழையும் இருக்கிறது என்கிறார். இந்த இரண்டு பத்தியில் குறிப்பிடப் படும் மூலிகைகளை மனதில் கொள்ளுங்கள்,இவற்றின் மகத்துவத்தை இந்த தொடரின் நெடுகில் பகிர்ந்து கொள்கிறேன்.

இராம தேவரின் ஆசிரமத்தில் இருந்து வடக்கே நடந்தால் வரும் சமதளத்தின் கிழக்கே போனால் பசுக்கிடை வரும், அதைத் தாண்டினால் எக்காலத்திலும் வற்றாத நவ்வலூற்று சுனையும் அதனையொட்டி பாறையும் இருக்கிறது. அதில் பாம்புக் கேணி இருப்பதாக குறிப்பிடுகிறார். அதனைத் தாண்டி கிழக்குப் பக்கத்தில் கூப்பிடு தூரத்தில் வழுக்கைப் பாறையையும் அதற்கப்பால் இருக்கும் பச்சரிசி மேட்டையும் கடந்தால் தெக்கம் பண்ணைமலை வழி வருமாம்.

இந்த வழியே கிழக்குப் பக்கமாக அரை நாளிகை நடந்தால் சின்ன பசுக்கிடையும், ஒப்பில்லா சாயையும் இருக்கிறதாம். இதனைத் தாண்டி கிழக்கே செல்ல பலா மரமும், கருப்பண்ண சுவாமி கோவிலும் இருக்கும் என்கிறார். இந்த கருப்பண்ண சுவாமி கோவிலைப் பற்றி நான் முன்னரே ஒரு பதிவில் பகிர்ந்திருக்கிறேன். இந்த கோவிலுக்கு பின்புறம்தான் தைலக் கிணறு இருக்கிறது. இரசவாதம் செய்ய பயன்படுத்திம் தைலம் இந்த கிணற்றில் நிரப்பப் பட்டிருப்பதாக கருதப் படுகிறது. கருப்பண்ண சுவாமியின் அருள் பெற்றவர்களால் மட்டுமே இந்த கிணற்றை அணுக முடியுமென்கின்றனர் இது பற்றிய பழைய பதிவினை இங்கே வாசிக்கலாம்.

சக்தி வாய்ந்த இந்த கோவிலை கடந்து போனால் ஆறு ஒன்று வரும், இந்த ஆற்றுக்குள்தான் பேச்சிப்பாறை இருக்கின்றதாம். இதன் வடக்குப் பக்கமிருக்கும் மேடேறினால் அங்கே துர்வாச ரிஷியின் ஆசிரமத்தை காணலாம் என்கிறார். இந்த ஆசிரமத்தின் கிழக்கே அம்புவிடும் தூரத்தில் வெள்ளைப் பாறையும், சந்தன மகாலிங்க சுவாமி கோவில் ஓடையும் இருக்கும். அதைக் கடந்து கிழக்கே பயணிக்க முச்சந்தியான பாதை ஒன்று வருமாம். இதில் தெற்கே போகும் பாதையில் சென்று மேடேறினால் சுந்தரர் கோவில் இருக்கிறது என்றும் அதை வணங்கி தெற்கே ஆற்றங்கரையோரமாய் கூப்பிடு தூரத்தில் மகாலிங்க கோவில் இருக்கிறது.

இதன் வடக்குப் பக்கம் கூப்பிடு தூரத்தில் அடர்ந்த காட்டுக்குள் அரை நாளிகை நடந்தால் பெரிய சுரங்கவழி ஒன்று இருக்கும் என்கிறார். இதில் நுழைந்து அரை நாளிகை நடக்க சந்தன மகாலிங்க சுவாமி கோவில் இருக்கிறது என்கிறார். இந்த கோவிலின் வடக்குப் பக்கத்தில் காளிகானலில் இருந்து நீரோடை வந்து விழுந்து கொண்டிருக்குமாம். அதில் நீராடிய பின்னரே சந்தன மகாலிங்க சுவாமியை வணங்க வேண்டும் என்கிரார்.

சிறப்பு மிக்க இந்த கோவிலில் மானிடர்கள் பூசை இல்லை என்றும் தேவரிஷி,முனிவர்கள்,சித்தர்கள் பூசைதான் எப்போதும் நடந்து கொண்டிருக்கும் என்ற தகவலையும் கோரக்கர் குறிப்பிடுகிறார். இந்த கோவிலின் தென்மேற்கு மூலையில் சட்டை முனியின் குகை இருக்கிறது. அந்த குகையின் தெற்கே கூப்பிடு தூரத்தில் வெண்நாவல் மரமும் அதன் இடது புறமிருக்கும் மண்மலையின் தெற்கே சமதளத்தில் வனபிரமி என்ற அரிய வகை மூலிகையும் வளர்ந்திருக்கும் என்கிறார்.

சட்டை முனி குகைக்கு நேர் கிழக்காக வரும் பாதையில் ஒரு நாளிகை தூரம் சென்றால், வடக்கே செல்லும் பாதையில் போய் சேரும் அதில் ஒரு நாளிகை நடக்க கும்ப மலை வரும் என்கிறார். இந்த கும்ப மலை அருகே இருக்கும் ஒரு பெரிய குகையில்தான் அகத்தியர் வாசம் செய்கிறார் என அகத்தியரின் வாசலுக்கு நம்மை கொண்டு வந்து சேர்க்கிறார் கோரக்கர்.

பதிவு கொஞ்சம் நீளமாகி விட்டது, வாசிப்பின் சுவாரசியம் கருதி நாளை தொடர்கிறேன்.

சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

9 comments:

Shiva said...

மிக அருமை.
தங்கள் உரையுடன் கோரக்கர் பாடல்களையும் சேர்த்தே பதிவிடுங்கள் தோழி.

Elangai Tamilan said...

தோழி,
திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி;சிதம்பரத்தை வணங்கினால் முக்தி;
திருவாரூரில் பிறக்க முக்தி கிடைக்கும்.;காசியில் இறக்க முக்தி.
இந்தச் சதுரகிரி தலத்திலோ இந்த நால்வகை முக்தி கிடைக்கும் என்பர்.
எனக்கு இங்குள்ள தமிழ் நண்பர் ஒருவர் , செம்பை தங்கமாக மாற்றும் வித்தையை,மூலிகையின் கூட்டையும், நவபாஷாணத்தின் கலவை அறிவிக்கிறேன்,
கற்பிக்கிறேன் என்றார்.ஆனால், நான் மரியாதையுடன் வேண்டாம் என்று மறுத்திவிட்டேன்.

'மனம் பழுத்தால் பிறவி தங்கம் -
மனம் பழுக்காவிட்டால் பிறவி பங்கம் -
தங்கத்தினை எண்ணி தரம் தாழாதே,
தங்க இடம் பாரப்பா...'
-என்பதே என்பதே எனது வேண்டுகோள்., தாங்கள்,மேலும் சதுரகிரி பற்றி ஒரு மாத கால அளவிலாவது ,இடுகைகள் இடவேண்டியது வரும்.நான் தங்களிடம் வேண்டுவதுல்லாம் ,ஒரு தலைப்பில் உள்ளதை முழுவதுமாக முடித்துவிட்டு ,அடுத்த பதிவிற்கு செல்வது நல்லது .
தங்களின் பதிவுகள் படிக்க படிக்க தெவிட்டாத கனியாக உள்ளது.மற்றது தாங்கள் சௌகரியம்.

JILLU-nu ORU YUVA said...

தொடர் மிகவும் அருமையாக இருக்கிறது தோழி, உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்,

GuruMunee said...

அன்புள்ள தோழி,

தாங்களின் பதிவு மிக அருமையாக இருக்கிறது. கும்பகிரி பொதுவாக எல்லாராலும் போக கூடிய வகையில் இருக்கிறது. இது பேரையூர் வட்டத்தில் உள்ள சாப்டூர் என்னும் கிராமத்தில் இருக்கிறது. நான் 2 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு நடைப்பெற்ற சித்தர் யாக பூஜையில்(அகத்தியர் ஆசிரமம் ) கலந்து கொண்டேன். உண்மைலே அதைப்போல ஒரு யாகத்தை என வாழ்வில் நான் கண்டதில்லை . சித்தர்களின் மொழி(தேவனாகரிக) எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை . ஆயினும் அவர்களின் ஆசிர்வாதம் எங்களுக்கு கிடைத்தது. இதனை சொல்ல வார்த்தைகள் இல்லை. இங்குள்ள அகஸ்தியர் ஆசிரமத்தில் உள்ள ஒரு பெரியவர் தான் மகாலிங்கத்திற்கு அபிஷேகம் செய்கிறார்.

இதனை பற்றி எழுத ஒரு நாவலே எழுதலாம்.

சித்தர்களை நோக்கி நீங்கள் ஒரு அடி எடுத்து வைத்தால் அவர்கள் உங்களை நோக்கி 100 அடி எடுத்து வைப்பார்கள்.
என்றும் சிவனடிமை-பாலா-சென்னை.

GuruMunee said...

@Elangai Tamilan
ஐயா இலங்கை தமிழனே,

தாங்களின் வேண்டுகோள் மிக சரியானது. தங்க(எங்க) இடம் வேண்டும் ? என்பதை சொன்னால் மிகவும் உபயோகமாக இருக்கும். தங்கத்தை தங்கமாக என்னாதவர்களுக்கு தான் தங்கம் செய்யும் வலிமையே வரும் .

ஊணுக்குள் உள்ளொளி(தங்க இடம்) காண்பவனே சித்தன் ...

என்றும் சிவனடிமை-பாலா-சென்னை.

praveen said...

இதனை படிக்க படிக்க சதுரகிரிக்கு போக வேண்டும் என்ற ஆசை எழுகிறது, அதிலும் தங்கள் சொன்ன கும்ப மலை செய்தி அருமை. இதனை படிக்கவே புண்ணியம் செய்து இருக்க வேண்டும்

Sasikumar C said...

இப்பவே கிளம்பி போகணும் போல தோணுது அவ்வளவு அருமையான தகவல்கள்...சொல்ல வார்த்தைகள் இல்லை......

மிக்க நன்றி தோழி அவர்களே..

சிவஹரிஹரன் said...

சதுரகிரி மகாலிங்கத்தை தரிசிக்கவரும் பக்தர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் - தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து சுமார் 2கிமீ தொலைவில் (வத்திராயிருப்பு - தாணிப்பாறை மெயின் ரோட்டில், மகாராஜபுரம் ரோட்டிற்கு எதிரில்) திரு.சிவசங்கு ஐயா அவர்களின் முதியோர் காப்பகத்தில், வெளியூரிலிருந்து வரும் அன்பகர்களுக்காக குளியல் வசதி செய்து தரப்பட்டுள்ளது. வியாபார நோக்கமில்லாமல் முற்றிலும் இலவச சேவையானதால், தேவைப்படுவோர் 9443324583/9444492998 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Rose said...

This is divine siddhas plane to let many people know about the products that sivaskkthi Nagmmmal trust produce about siddhas.
I am proud of you Tholi.

Post a Comment