சித்தர்களின் உலோகவியல் - பித்தளை

Author: தோழி / Labels: ,

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்ட உலோகங்களை சரியான விகிதத்தில் ஒன்றோடு ஒன்று கலப்பதன் மூலம் , புதிய மூன்றாவது வகை உலோகத்தினை உருவாக்கிட இயலும். இவ்வாறு உருவாக்கப் படும் பொருட்களை அலோகம் என்கின்றனர். இணைக்கப் பட்ட உலோகங்களின் தன்மைகளை தன்னகத்தே கொண்டு புதிய மேம்படுத்தப் பட்ட ஒன்றாக இந்த அலோகங்கள் இருக்கும்.

முறையான கலவை விகிதம், சரியான இணைப்பு தொழில் நுட்பம் இருந்தால் மட்டுமே இத்தகைய சிறந்த அலோகங்களை தயாரிக்க முடியும். நவீன அறிவியல் மிகுந்த ஆய்வுகளுக்குப் பின்னரே இத்தகைய அலோகங்களை உருவாக்கி பயன் படுத்துகிறது. நமது சித்தர்களோ பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இந்த தொழில் நுட்பத்தை உணர்ந்து பயன் படுத்தி சிறந்திருந்தனர் என்பதற்கு ஏராளமான ஆதாரங்கள் நம்மிடையே இருக்கிறது.

இந்த வகையில் இன்றும் வெகுசன பயன்பாட்டில் இருக்கும் அலோகம் ஒன்றினைப் பற்றிய சித்தர்களின் தெளிவுகளை பார்ப்போம்.துத்த நாகம் எனப் படும் நாகமும்,நேற்றைய பதிவில் பார்த்த செம்பும் இணைத்து உருவாக்கப் படுவதுதான் பித்தளை. இது கூத்தோடி, ஊத்தபரி, முழுக்கு, குடவன், காளிக்கம், நற்றப்பொன், சேரு என பவேறு பெயர்களாள் சித்தர் பாடல்களில் குறிப்பிடப் பட்டிருக்கிறது.இந்த பித்தளையின் வகைகள், அதன் கலவை விகிதம், தன்மை, பண்புகளைக் குறித்து போகர் விரிவாக தனது ”போகர்7000”, ”போகர் நிகண்டு” நூல்களில் கூறியிருக்கிறார்.

"கண்மையான காகதுண்ட மாகி ஒன்று
கடுந்தார பித்தளைதான் ரெண்டுமாச்சு
இரெண்டிலே முன்சொன்ன காகதுண்டந்தான்
ஏற்றமான பூமியில் உற்பத்தி யாச்சு
பின்னது நாகம் ரெண் டெட்டு செம்பு
கூடித்தான் பித்தளையும் ஆச்சு ஆச்சு"

- போகர் 7000 -

இதன்படி “காகதுண்டம்”, ”கடுந்தாரம்” என இரண்டு வகை பித்தளைகள் இருப்பதாக போகர் கூறுகிறார். இதில் காகதுண்டம் என்பது இயற்கையாகவே கிடைக்கும் பித்தளை என்கிறார். இரண்டு பங்கு துத்த நாகமும், எட்டு பங்கு செம்பும் சேர்த்து உருக்குவதால் கிடைப்பது கடுந்தார பித்தளை என்கிறார். பித்தளையின் குணாதிசயங்களை பின்வருமாறு விளக்குகிறார்.

"தானான நாகம் ரெண்டு செம்போ எட்டு
தனிக் கூட்டுப் பித்தளையின் குணமுந்தானும்
கனமாக் குடிலமாகி வெப்பமாகி
வெளுப்பாகி விரிசலாகி மஞ்சளாகி
தேனான விருதி மிகவாயிருக்கும்"


- போகர் 7000 -

நாகமும் செம்பும் செர்த்து உருவாக்கும் பித்தளையானது இயல்பில் கனமானதாகவும்,அதிக வெப்பத்தைத் தாங்கக் கூடியதாகவும் இருக்கும். வெளுறிய மஞ்சள் நிறத்தைகொண்டதாகவும் நாகமும் செம்பும் கலவையாகக் கலந்ததும் அதிக செறிமானமுள்ளதாகவும் இருக்கும் என்கிறார். இவை தவிர பித்தளையின் பயன்பாடுகளைப் பற்றியும் கூறியிருக்கிறார். பிரிதொரு சந்தர்ப்பத்தில் அவை பற்றிய விவரங்களை விரிவாக பகிர்ந்து கொள்கிறேன்.

நாளைய பதிவில் உலோகவியல் குறித்த மேலதிக விவரங்களுடன் சந்திக்கிறேன்.


சித்தர்கள் இராச்சியம் தளத்தின் பதிவுகளை ஆங்கிலத்தில் வாசிக்க...



Post a Comment

5 comments:

அகோரி said...

Nice

சுடுதண்ணி said...

வெகுநாட்களாக தொடர்ந்து வாசித்து வருகிறேன். அருமையான, பாதுகாக்கப்பட வேண்டிய, பதிப்பிக்கப் பட வேண்டிய தகவல்கள். வாழ்த்துக்களும், நன்றியும்.

தொடர்ந்து பகிருங்கள்.

Guruvadi Saranam said...

தோழி தங்களை நினைத்தாள் ஆச்சரியமாக உள்ளது.
தாங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் !

நன்றி
ராஜேந்திரன்

teenmoon5 said...

ஆனால் இந்த காலத்தில் அலோகம் என்ற
சொல் உலோகம் அல்லாதவை (non metal) என்ற பொருளில் வழங்கபடுகிறது.

tamilvirumbi said...

Thozi,
The information given by you today is
astonishing to me.As siththars are having high calibre,long long ago,they knew about formation of alloys and non-metals along with
metalloids.Thanks a lot for sharing nice information to this tamil world.

Post a Comment